பாலசுப்ரமணிய சுவாமி

கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையத்தில் 360 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இக்கோயில், சேர மன்னர்களால் நிர்மாணிக்கப் பட்டதாகும். கோயில் கோபுரங்கள் மைசூர் கோபுரங்களைப் போல் காட்சியளிகின்றன. மலையில் சமணர்கள் தங்கியதற்கான அடையாளமாகக் கல் படுக்கைகள் காணப்படுகின்றன. இக்கோயில் கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்களைக் காண முடிகிறது.
இங்குள்ள விஷ்ணு துர்கையை பன்னிரண்டு வாரம் எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்கினால் நிச்சயம் திருமணம் நடக்கும். சஷ்டி விரதம் அனுஷ்டிக்க, குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இவை தவிர, தொழில் விருத்தி, உடல் நலக்குறைவு நீங்குதல், ஆயுள் பலம், விவசாயம் செழிக்கவும் வேண்டிக் கொள்கிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறப்பெற்றவர்கள் அபிஷேகம், கிருத்திகை அன்னதானம், காவடி, பால் குடம் எடுத்தல், முடி இறக்குதல், காது குத்துதல், சஷ்டி விரதம் இருத்தல், சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி போன்றவற்றைச் செய்கிறார்கள்.
தைப்பூசம், சூரசம்காரம் போன்ற விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். கார்த்திகை தீபம், ஆடிக்கிருத்திகை மற்றும் மாதக் கிருத்திகை, சஷ்டி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தவிர, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு ஆகியவை விசேஷ நாட்கள்.
செல்லும் வழி
கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் 18 கி.மீ. பேருந்து வசதி உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.


கல்யாண பசுபதீஸ்வரர்

புகழ்ச்சோழ நாயனார் ஆண்டபதி; எறிபத்த நாயனார் பிறந்த தலம்;
சிவகாமியாண்டார் மலர்த்தொண்டு செய்த திருத்தலம்; தேவாரம், திருப்புகழ் பாடல் பெற்ற தலம்; திருவிசைப்பா பாடிய கருவூர் தேவரின் அவதாரத் தலம்; முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டது போன்ற புராதனச் சிறப்புகளைப் பெற்றது கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில். கருவறையில் ‘ஆனிலை’ எனும் லிங்கம், சதுர வடிவ ஆவுடையார் மீது அமைந்த சுயம்பு மூர்த்தியாகும். மூலவர் பசுபதீஸ்வரர் என்றும், பசுபதிநாதர் என்றும், ஆனிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவிகள் சௌந்தரநாயகி (வடிவுடையாள்), கிருபாநாயகி (அலங்காரவல்லி).
படைப்புத் திறனால் கர்வம் கொண்ட பிரம்மனின் கர்வத்தை, காமதேனுவைக் கொண்டு போக்க எண்ணம் கொண்டார் சிவபெருமான். அதன்படி, காமதேனு பசு, நாரதர் கூறியபடி பூலோகத்தில், வஞ்சிவனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, ‘புற்று ஒன்றுக்குள் ஆதிலிங்கம் உள்ளது. அதை வழிபடு’என்று அசரீரி உரைக்க, காமதேனு புற்றின் மீது பாலை சொரிந்து இறைவனை வழிபட்டது.
ஒருநாள் இவ்வாறு பால் சொரியும்போது, இறைவன் திருமுடி மீது காமதேனுவின் குளம்பு பட்டுவிட, லிங்கத்தில் மீது ரத்தம் வழிந்தது. இதனால் மனம் வருந்திய காமதேனுவின் முன் சிவபெருமான் தோன்றி, நீ வழிபட்டதனால் இந்த உலகம் என்னை ‘பசுபதி’ என்ற பெயரால் அழைக்கும். என்மீது பாலைப் பொழிந்ததால் நீயும் பிரம்மனைப் போல் படைப்புத்தொழில் செய்யக் கடவாய்" என அருள் புரிந்தார். இதனால் பிரம்மன் கர்வம் நீங்கினான் என்கிறது தல வரலாறு. காமதேனு, ஈசனை வழிபடும் போது அதன் குளம்பு சிவலிங்கத்தின் மீது பட்டதால் உண்டான தழும்பை இன்றும் காண முடிகிறது.
கோயிலுக்குள் நுழைகையில் கருங்கல்லால் ஆன கொடி மரம் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் புகழ்ச் சோழ நாயனார், தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமும், மற்றொரு புறம் சிவலிங்கத்தை பசு ஒன்று நாவால் வருடும் சிற்பமும் உள்ளன. பசுவின் பின்னங்கால்களுக்கு மத்தியில் அதன் மடிக்குக் கீழே லிங்கம் காணப்படுகிறது. மூலவர் ஈசனுக்கு முன்பாக உள்ள தூண்களில் எறிபத்தர், முசுகுந்தர், ஞானசம்பந்தர் மற்றும் புகழ்ச்சோழரின் சிலா ரூபங்கள் காணப்படுகின்றன. பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூரார் வாழ்ந்து, ஈசனோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது. கோயிலின் தென்மேற்கு மூலையில் கருவூராருக்கு சன்னிதி உண்டு.
கோயிலின் உட்புறம் செல்கையில் வாயிலின் வலப்பக்கத் தூண் ஒன்றில் நாலாயிர சக்கர பந்தனம் செதுக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டும். கருவறையின் பின்புறத்தில் அர்த்த நாரீஸ்வரர் அருள்பாலிப்பது விசேஷம். இத்தலத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபம், ‘புகழ்ச் சோழர் மண்டபம்’ எனப்படுகிறது. சூரியன் வழிபடும் தலங்களில் இதுவும் ஒன்று.
கோயிலுக்கு வடபுறத்தில் தெற்கு நோக்கியவாறு அம்பாள் சௌந்திரநாயகி காட்சி தருகிறாள். இவள் கருவூருக்கு மேற்கே நான்கு கல் தொலைவில் உள்ள அப்பிபாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வேடுவ இனத்துப் பெண். பசுபதீஸ்வரரையே மணாளனாக தியானித்து, பங்குனி உத்திரத் திருவிழாவில் ஏழாம் நாள் ஈசனை மணந்து இறைவனோடு ஐக்கியமான மானுடப் பெண் இவள் என்று தல புராணம் சொல்கிறது.
இத்தலத்து ஈசனை வணங்குவோருக்கு மன அமைதி கிடைக்கிறது. தவிர, கல்யாண வரம், குழந்தை வரம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோரும் இவரை வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறப் பெற்றவர்கள் சுவாமிக்கு தாலி போன்ற தங்க ஆபரணங்களைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். பால், தயிர், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்கின்றனர். சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்துதல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தல் போன்றவற்றையும் செய்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலின் தல விருட்சமாக வஞ்சி மரமும், தல தீர்த்தமாக அமராவதி நதியும் உள்ளன. தைப்பூசத்தன்று கருவூரார் ஆனிலையப்பருடன் கலந்ததால் அன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரம், மார்கழி, ஆருத்ரா மற்றும் பிரதோஷ நாட்கள், குரு, சனி பெயர்ச்சிகள், பிரதி பௌர்ணமி நாட்கள் விசேஷமாகும்.
செல்லும் வழி:
கரூர் நகரின் மையப் பகுதியில் கோயில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.
தொடர்புக்கு : +91-4324-262010

சிந்தலவாடி நரசிம்மர்

தமிழகத்தில் உள்ள அஷ்ட நரசிம்மர் கோயில்களில், சிந்தலவாடி யோக நரசிம்மர் கோயிலும் ஒன்று. ஆனால், இங்கு மிகப் பின்னாளில்தான் நரசிம்மர் எழுந்தருளினார் என்பது சுவாரஸ்யமான சரிதம். அதற்கு முன்னால், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் மற்றும் அனுமன் ஆகியோர் இங்கு எழுந்தருளியிருந்தனர். இவர்களைப் பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீவியாசராஜர்.
ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்களின் பெருமை திசையெங்கும் பரவ, பலரும் இங்கு வந்து தங்கி, இறைவழிபாடு நடத்தினர். அப்படி வந்த பக்தர்களில் ஒருவர் ஸ்ரீ முஷ்ணம் ஆர்யாச்சார். இவர் கனவில் தோன்றிய ஸ்ரீ நரசிம்மர் - தான் சிந்தலவாடி யின் அருகில் உள்ள கருப்பத்தூர் என்ற காவிரிக்கரை ஊரில் ஒரு சலவைத் தொழிலாளி, துணிகளைத் துவைக்கப் பயன்படுத்தும் கல்லாக இருப்பதாகத் தெரிவித்து, அங்கு வந்து தம்மை மேற்கு திசையில் எவ்வளவு தொலைவு எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு தொலைவு செல்ல ஆணையிட்டார். எந்த இடத்தில் பாரம் அதிகமாகத் தெரிகிறதோ அந்த இடத்திலேயே தம்மைப் பிரதிஷ்டை செய்யவும் பணித்தார். அதேநேரத்தில் சலவைத் தொழிலாளிக்கும் ஒரு கனவு. வரும் பக்தரிடம் அக்கல்லைக் தந்து விட உத்தரவு கொடுக்கப்பட்டது.
மறுநாள், ஆர்யாச்சார் சிந்தலவாடியில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள கருப்பத்தூருக்குச் சென்றார். கனவில் தெரிந்த வழிகளில் பயணம் தொடர, சலவைத் தொழிலாளர்கள் பணி செய்யும் இடம் வந்தது. குறிப்பிட்ட சலவைத் தொழிலாளியும் ஆர்யாச்சாரை அழைத்துச் சென்று அக்கல்லைக் காண்பித்தார். அதைத் திருப்பிப் பார்த்தபோது ஸ்ரீ யோக நரசிம்மரின் சிலா ரூபம் தெரிந்தது. ஸ்ரீ ஆர்யாச்சார் பக்தியாக, அந்த விக்கிரகத்தோடு மேற்கு நோக்கி நடந்தார். சிந்தலவாடி அருகே வந்தபோது, நடை நடுங்கியது; கல் பாரமாகத் தெரிய ஆரம்பித்தது.
ஸ்ரீ நரசிம்மரின் எண்ணம் பக்தருக்குப் புரிந்தது. அங்கேயே ஸ்ரீ யோக நரசிம்மரை இறக்கி, முன்பே இருந்த ஸ்ரீ காளிங்க நர்த்தனக் கோயிலில் ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்தார். பின்னாளில் இங்கு யாத்திரை வந்த ஸ்ரீ வியாசராஜர் ஸ்ரீ யோக நரசிம்மரை பூஜித்தார்.
ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் கரூர், குளித்தலை, திருச்சி, முசிறி பகுதிகளில் வாழும் மத்வ சம்பிரதாயக் குடும்பங்களின் குலதெய்வமாக இருந்து வருகிறது. தங்கள் குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காது குத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை இக்கோயிலில் நடத்துகிறார்கள்" என்று தெரிவிக்கிறார் கோயில் நிர்வாகி கே.பார்த்தசாரதி. மத்வ சம்பிரதாயப் படி தினசரி பூஜைகளும் உற்சவங்களும் இங்கு நடத்தப்படுகின்றன.
செல்லும் வழி
திருச்சி - குளித்தலை சாலையில் 45வது கி.மீ., குளித்தலையில் இருந்து 12 கி.மீ.
தொடர்புக்கு: 0 98409 21022 / 0 98453 48009

ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர்

கரூர் மாவட்டம், அயர்மலையில் சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கிறார் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வர பெருமான். ‘திருவாட்போக்கி’ என்கிற புராணப் பெயர் கொண்ட இத்தல இறைவன், வாள் போக்கி நாதர் என்றும், ராஜலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் சுரும்பார்குழலி. தேவாரப் பாடல் பெற்ற, காவிரி தென்கரைத் தலங்களில் இது முதலாவதாகும்.
இத்தல இறைவன் ஒன்பது (நவ) ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையைச் சுற்றி அமைந்த, சுற்று வட்டாரப் பகுதிகளில் பூமிக்கடியில் பச்சைக் கற்கள், சிவப்புக் கற்கள் நிறைய கிடைக்கின்றன. சுற்றிலும் எட்டு பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இம்மலையில் பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை என்று கூறப்படுகிறது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த வைரப்பெருமாள் என்பவர் தனக்குக் குழந்தை பிறந்தால் தன் சிரசை காணிக்கையாகத் தருவதாக இறைவனிடம் வேண்டிக்கொண்டார். வேண்டுதல் நிறைவேற, இவர் தமது சிரசை சுவாமிக்குக் கொடுத்தார். மலைக்குக் கீழே பாதமும், மேலே சிரசும் வந்தது. தேனும் தேங்காய் பாலும் மட்டும்தான் இவருக்கு அபிஷேகம். பூஜை முடிந்த பிறகு சுவாமியின் மாலை இவருக்குத்தான் போடப்படுகிறது. இத்தலத்தில் இவர் மிகவும் விசேஷமானவர்.
ஆயர் ஒருவர் அபிஷேகத்துக்காகக் கொண்டு வந்த பாலை காகம் கவிழ்த்ததால், காகம் எரிந்து போயிற்றாம். அதனால், இப்போதும் இந்த மலையின் மீது ஒரு காகம் கூடப் பறப்பதில்லை என்பது அதிசயம். மூலவர் வாள்போக்கிநாதருக்கு தினமும் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்தப் பாலை கோமுகம் வழியாகப் பிடித்து ஒரு பாத்திரத்தில் வைத்தால் இரண்டு மணி நேரத்தில் தயிராக மாறி விடுவது அதிசயம். இதையே பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள். 1178 அடி உயரமும், 1117 படிகளும் கொண்ட மலை மீது அமைந்துள்ள இறைவன் மீது, சித்திரை மாதங்களில் சன்னிதியின் நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சூரிய கதிர்கள் விழுவது சிறப்பு.
இயற்கை எழிலுடன் காட்சி தரும் இம்மலை மேரு மலையின் ஒரு சிகரம். சோதிலிங்க வடிவமானது. காலையில் காவிரிக் கரையிலுள்ள கடம்பர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, நடுப்பகலில் ரத்தினகிரீஸ்வரரை வணங்கி, மாலையில் திருஈங்கோ மலை நாதரை வழிபட்டால் புண்ணியம் என்பது ஐதீகம்.
மணிமுடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தல இறைவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்தபோது, அங்குள்ள கொப்பரையில் காவிரி தீர்த்தம் நிரப்பப்பட்டது. ஆனால், அக்கொப்பரை நிரம்பவேயில்லை. மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான். சிவலிங்கத்தில் ரத்தம் வழிந்தது. அதைக்கண்ட மன்னன் தன் தவறை உணர்ந்து, இறைவனிடம் வருந்தி மன்னிப்புக் கோரினான். இறைவனும் அவனை மன்னித்ததோடு, ரத்தினங்களையும் வழங்கினார் என்பது தல வரலாறு. சுவாமி மீது மன்னன் வீசிய வாளின் தழும்பு இன்றும் காணப்படுகிறது.
தினமும் 8 கி.மீ. தூரம் நடந்து சென்று காவிரி தீர்த்தம் கொண்டுவரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்கோயிலில் சித்திரை திருவிழா 15 நாட்கள், கார்த்திகை சோமவாரம், பிரதோஷம், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, பௌர்ணமி நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல், வருடப் பிறப்பு நாட்கள் விசேஷமானவை.
திருமணம் நடக்க, தொழில் விருத்தியாக, புத்திர பாக்கியம் கிடைக்க பக்தர்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். நேர்த்திக்கடனாக, அபிஷேகம், வஸ்த்ரம் மற்றும் மணி விளக்குகளைச் செலுத்துகிறார்கள். படி வழியே மலையேறும்போது, சுற்றிலும் ஏராளமான மூலிகை மரங்கள் உள்ளதால் அம்மூலிகைக் காற்றை சுவாசிக்கும் போது உடலின் பல்வேறு உபாதைகளும் நீங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இங்கு இறைவனுக்கு கேந்தி பூ சாத்தப்படுவதில்லை. கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி சுவாமி விசேஷமாக, மாணிக்கம் பதித்த கிரீடத்துடன் காட்சியளிப்பார்.
செல்லும் வழி
குளித்தலையில் இருந்து 8 கி.மீ. தெலைவில் மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது.
தரிசனநேரம்: காலை 6 மணி முதல் 11 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.
தொடர்புக்கு: +91 4323-245522

இரட்டை நடராஜர்
கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் இரட்டை நடராஜர்களைத் தரிசிக்கலாம். இங்கு ஒரே சன்னிதியில் இருவரும் அருகருகே காட்சி தருகின்றனர். ஒரு நடராஜருக்கு தை முதல் ஆனி மாதம் வரையிலும், இன்னொருவருக்கு ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலும் (ஒன்று உத்ராயணம் மற்றது தட்சிணாயனம்) பூஜைகள் நடைபெறுகின்றன.

நிறம் மாறும் லிங்கம்
கரூர், மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள திருஈங்கோ மலையில் அருள்பாலிக்கும் மரகதாசலேசுவரரை அகத்திய முனிவர் தேனீயாக உருவெடுத்து வழிபடுகின்றார் என்று கூறப்படுகிறது. எனவே, இங்கு யாரும் தேனீக்களை துன்புறுத்துவதில்லை. இங்கு மாசி மாத சிவராத்திரியின்போது மூன்று நாட்கள் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழுகிறது. இந்த நேரத்தில் லிங்கம் நிறம் மாறிக் காட்சி தருவது சிறப்பு.

குளிர்ச்சியான மலைப்பாறை
கரூருக்கு வடகிழக்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வெண்ணெய் மலை பாலமுருகன் கோயில். இக்கோயிலின் நுழைவு வாயிலில் பெரிய கருங்கல்லினால் ஆன தீபஸ்தம்பம் உள்ளது. இங்கு முருகன் தனித்து அருள்பாலிக்கின்றார். இம்மலையின் பாறை உச்சி வெயிலிலும்கூட குளிர்ச்சியாகவே இருப்பது தனிச் சிறப்பு.

விநோத வழிபாடு
கரூர் மாவட்டம், மகாதானபுரத்தில் உள்ளது மகாலட்சுமி கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு, தங்கள் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.


மழை தரும் காயத்ரி தேவி
கரூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள ராம் நகர் பகுதியில் ஸ்ரீபக்த அபய கோதண்டராமர் கோயில் உள்ளது. இங்கு தனிச் சன்னிதியில் ஸ்ரீகாயத்ரி தேவி அருள்புரிகிறாள். கல்வியில் சிறந்து விளங்கவும், தவறாது மழை பொழியவும், நினைத்த காரியம் நடைபெறவும் பக்தர்கள் இத்தேவியை வழிபடுகிறார்கள். விவசாயப் பெருமக்கள் மழை வேண்டி சித்திரை மாதத்தில் சிறப்பு யாகம் செய்து பலன் பெறுகிறார்கள். யாகம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் மழையும் என்பது நம்பிக்கை.


திருமண் பிரசாதம்

கரூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக்கோயில். இங்கு அம்பாள் நான்கு கரங்களுடன், கிழக்கு முகமாக சற்றே ஈசான்யப் பார்வையுடன், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இக்கோயிலில் நடக்கும் வைகாசி பெருவிழாவில், கம்பம் நடும் விழா விசேஷமானது. வேப்ப மரத்தின் மூன்று கிளைகளைக் கொண்ட ஒரு பகுதியை, அதன் பட்டைகளை உரித்து, அதில் மஞ்சள் செருகி, ஆற்றில் பூஜித்து, ஆலயத்தின் பலி பீடத்தின் அருகில் நடப்படுகிறது. இதையே பக்தர்கள் அம்பாளாகக் கருதி வழிபடுகிறார்கள். இக்கோயிலில் அம்மன் பிரசாதமாக திருமண் வழங்கப்படுகிறது.
-

சதாசிவ பிரம்மேந்திரர்
சதாசிவ பிரம்மேந்திரர் சுவாமிகள் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.
தஞ்சாவூரில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் சிலா ரூபத்தை வடிவமைத்தவர் இவர் என்பார்கள். அக்கோயிலில் இவருடைய சுதை வடிவத்தைக் காணலாம். இவருடைய அதிஷ்டானம் கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது.


 

Comments